Sunday, 3 March 2013

உயர்ந்த மனிதன்


அது ஒரு சின்ன கிராமம். அங்கு ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் ராஜா என்ற சிறுவன் படித்து வந்தான்.

ஒருநாள் வகுப்பறைக்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் அங்கு ராஜா சோகமாக உட்கார்ந்து இருப்பதை கண்டார்.

‘ராஜா! ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?‘ என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.

அதற்கு ராஜா, ‘நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதனால் என் நண்பர்கள் என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.‘ என்று கூறினான்.

தான் செய்த தவறை உணர்ந்த ராஜா தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் ராஜாவுக்கு உதவி செய்ய நினைத்தார்.

மறு நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து, ‘இது யாருக்கு வேண்டும்?‘ என்று மாணவர்களிடம் கேட்டார்.

துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளைத் தூக்கினார்கள்.

உடனே ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி, ‘இப்போ இது யாருக்கு வேண்டும்?‘ என்று கேட்டார்.

அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டை கீழே போட்டு காலால் மிதித்து தேய்த்து, ஆசிரியர் மாணவர்களிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். ‘இப்போ இது யாருக்கு வேண்டும்?‘

மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

வகுப்பிலிருந்த அனைவரும் அந்த 50 ரூபாய் தனக்கு வேண்டும் என்பதுபோல் கையை இறக்காமல் தூக்கியவாறே நின்று கொண்டிருந்தனர்.

கீழே கிடந்த ரூபாய் நோட்டை கையில் எடுத்த ஆசிரியர், ‘பார்த்தீர்களா? இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்த போதும், கசங்கி இருந்த போதும் அதோட மதிப்பு குறைந்து விட்டதா? இல்லை அல்லவா? .அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகளும் நம்முடைய மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு. தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே போதும், அவனை மன்னித்துவிடலாம்.‘

‘அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் ராஜா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு இந்த ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் ராஜாவின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக ராஜாவை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள்!‘ என்று ஆசிரியர் கூறினார்.

ஆசிரியர் கூறியதைக் கேட்ட மற்ற மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

நீதி:
‘தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து திருந்துபவன் மனிதன். அதை மன்னித்து ஏற்றுக் கொள்பவன் உயர்ந்த மனிதன்.‘

No comments:

Post a Comment