இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் ஏரி நிரம்பியது. பூமியும் ஏரி நீரும் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்த ஏரியில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அந்த தவளையால் அன்று குளிரைத் தாங்க முடியவில்லை.
மழை ஓய்ந்து நின்றதும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் கொஞ்சம் வெது வெதுப்பாக இருக்குமே என்று அந்த கிணற்றினுள் குதித்தது.
அந்தக் கிணற்றிற்குள் இருந்த ஒரு தவளை ஏரியிலிருந்து வந்த புதிய தவளையைப் பார்த்து வரவேற்றது. தான் சேர்த்து வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய ஏரித் தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்ததை கண்ட கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிதாக வந்த ஏரித்தவளையைப் பிடிக்கவில்லை.
‘நாமே இங்கு உணவு பற்றாக்குறையில் இருக்கும் போது புதிய விருந்தாளி வேறா?'
எனவே புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.
ஏரித் தவளையிடம் கிணற்றுத் தவளை, 'நண்பனே! இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய்?' என்று கேட்டது.
'அருகில் இருக்கும் ஏரியில்தான் இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட பெரிய நீர் நிலை. அங்கு நம்மைத் தவிர மீன், ஆமை, முதலை ஆகியவையும் உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிடமிக மிகப் பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'இல்லை. நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ சொல்லியும், அதை அந்தக் கிணற்றுத் தவளையும், அதன் கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லா கிணற்றுத் தவளைகளும் ஒன்று சேர்ந்து ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
நல்லவேளையாக அப்போது பார்த்து, கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல வந்த ஒரு பெண் வாளியை கிணற்றினுள் இறக்கினாள்.
ஏரித்தவளை அந்த வாளியினுள் தாவிக் குதித்து அதோடு மேலே சென்றதும் வெளியே குதித்து ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி:
‘முட்டாள்களுடன் வாதாடக் கூடாது'.
No comments:
Post a Comment