ரகு, அரவிந்த் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். ரகு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தவன். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படாதவன். அரவிந்த் ஓரளவு வசதி படைத்தவன். ஆனால் சுயநலமிக்கவன்.
ஒரு நாள் ரகுவிடம் வந்த அரவிந்த், ‘ரகு! நேற்று என்னோட பர்ஸ் தொலைந்து விட்டது. அதில் ஐநூறு ரூபாய் வைத்திருந்தேன். யார் கையில் மாட்டியதோ?‘ என்று புலம்பினான்.
‘கவலைப்படாதே அரவிந்த்! கஷ்டப்பட்ட பணம் நிச்சயம் கிடைக்கும்.‘ என்று ரகு கூறினான்.
கொஞ்ச நேரம் கழித்து ஆபீஸ் பையன் குணா டீ எடுத்து வந்தான். அவனிடம் ரகு, அரவிந்தின் பர்ஸ் தொலைந்துபோன விஷயத்தை கூறினான்.
உடனே குணா தன் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு ஒரு பர்ஸை எடுத்து, ‘இதுவா பாருங்கள் சார். காலையில் ஆபீஸை பெருக்கும்போது இங்கே டேபிளுக்கு அடியில் கிடந்தது. திறந்து பார்த்தேன். ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. வேறு எதுவுமில்லை. யாருடையது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.‘ என்று கொடுத்தான்.
‘அதை நீயே அரவந்திடம் கொண்டு போய் கொடுத்து விடு.‘ என்று ரகு குணாவிடம் கூற, அவனும் அரவிந்திடம் சென்று, ‘இது உங்களுடையதா பாருங்கள் சார்!‘ என்று அந்த பர்ஸை அவனிடம் கொடுத்தான்.
அதை திறந்து பார்த்துவிட்டு, ‘இதில் நான் அறுநூறு ரூபாய் வைத்திருந்தேன். ஆனால் ஐநூறு ரூபாய்தான் இருக்கிறது. இன்னொரு நூறு ரூபாய் நோட்டைக் காணோமே?‘ என்றான் அரவிந்த்.
உடனே குணா ரகுவிடம் வந்து, ‘பாருங்கள் சார்! அரவிந்த் சார் என்னை சந்தேகப் படுகிறார்.‘ என்று கூறினான்.
குணாவோ மிகவும் நல்லவன். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவனது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நினைத்த ரகு, குணாவையும் அழைத்துக் கொண்டு இருவருமாக அரவிந்திடம் சென்றனர்.
‘அரவிந்த்! அந்த பர்ஸைக் கொடு.‘ என்று அரவிந்திடமிருந்து அந்த பர்ஸை வாங்கிய ரகு அதை குணாவிடம் கொடுத்தான்.
‘டேய் ரகு! அதை ஏன் அவன்கிட்ட கொடுக்கிறாய்? அது என்னோட பர்ஸ்தாண்டா‘ என்றான் அரவிந்த்.
‘இல்லை அரவிந்த்! நீ தொலைத்த பர்ஸில் அறுநூறு ரூபாய் வைத்திருந்ததாய் சொன்னாயாமே? இதில் ஐநூறு ரூபாய்தானே இருந்தது. ஆகவே இது நீ தொலைத்த பர்ஸ் இல்லை. அறுநூறு ரூபாயோடு தொலைந்துபோன உன்னோட பர்ஸ் நிச்சயம் கிடைக்கும் அரவிந்த்!‘ என்று சொன்ன ரகு, குணாவிடம் திரும்பி, ‘இதை நீயே வைத்துக்கொள் குணா.‘ என்று ரகு கூறினான்.
‘ரொம்ப நன்றி சார்!‘ என்று சொல்லிவிட்டு குணா அந்த பர்ஸுடன் சென்று விட்டான்.
திருடனுக்கு தேள் கொட்டியது போலாயிற்று அரவிந்தின் நிலை.
என்ன செய்வதென்று புரியவில்லை. தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டான் அரவிந்த்.
தனது தவறை உணர்ந்த அவன், இனி சுயமில்லாத நேர்மையான மனிதனாக வாழவேண்டும் என முடிவுசெய்தான்
நீதி:
‘பொய் சொல்லக் கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைபடவும் கூடாது.
‘பொய் சொல்லக் கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைபடவும் கூடாது.
No comments:
Post a Comment