காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. ஆறாம் வகுப்பாசிரியர் திருத்திய விடைத் தாள்களுடன் உள்ளே வந்தார்.
வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் நேரே குமாரிடம்தான் வந்தார்.
"ஏண்டா அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.
"சாரி சார். மறந்திட்டேன் சார்" என்று சமாதானம் சொன்னான் குமார்.
படிப்பில் முதலாவதாக மதிப்பெண் வாங்கும் குமார் ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்ட மாட்டான்.
காலையில் குளிக்க மாட்டான். பல நாட்கள் பல்லைக்கூட விளக்காமல் பள்ளிக்கு வருவான்.
கேட்டால், "யானை என்ன பல்லா விளக்குகிறது?" என்று கிண்டலாக திருப்பிக் கேட்பான்.
குமாரின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
ஆனால் அவன் கவனம் என்னவோ முழுக்க முழுக்கப் படிப்பிலேயே இருந்தது.
அரையாண்டுத் தேர்வு வந்தது. குமார் விழுந்து விழுந்து படித்தான். எப்போதும்போல முதல் மதிப்பெண்ணை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
"டேய் குமார்! குளிச்சிட்டுப் போய் படிடா" என்று அம்மா சொன்னார்.
"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்று படிப்பதிலேயே குறியாய் இருந்தான் குமார்.
தேர்வுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் போது குமாருக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.
மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரிதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு வேறு அனலாக கொதித்தது.
குமாரின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. குமார் புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை.
குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ‘பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்க வேண்டும்.‘ என்றார் டாக்டர். காய்ச்சல் வேறு.
"தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர்.
குமார் ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். குமாரால் அந்த அரையாண்டுத் தேர்வை எழுத முடியவில்லை.
அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.
அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மதிப்பெண் கார்த்திக்" என்று வகுப்பாசிரியர் சொன்னதும் குமார் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.
"சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார்.
குமார் மௌனமாக இருந்தான். அப்போதே அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்கு வரும்போது, "அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல மாணவர்கள் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.
குமாரும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.
நீதி:
‘சுத்தம் சுகம் தரும்‘
No comments:
Post a Comment