அவருக்கு முத்து, ரத்தினம், வைரம் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவன் முத்து வெளிநாட்டு வியாபாரத்தையும் அவன் தம்பிகள் ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டனர்.
திடீரென்று ஒரு நாள் முத்து வியாபாரி மாணிக்கத்தின் உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று அவருக்கு தோன்றியது. உடனே சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.
பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அடுத்த சில நாட்களில் வெளி நாட்டுக்கு வியாபாரத்துக்குச் சென்றிருந்த அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் அப்பா இறந்த விஷயத்தைக் கூறி, அவர் விருப்பப்படி சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
அண்ணனும் அப்பாவின் சொல்லை மதித்து தன் தம்பிகள் இருவரும் சொன்னதை நம்பி ஏற்றுக் கொண்டான்.
ஆனால் அன்று இரவே பேராசை பிடித்த தம்பிகள் இருவரும் சேர்ந்து, முத்து தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் தூக்கிப் போட்டு விட்டு வந்து விட்டனர்.
மறுநாள் காலையில் அந்த குளத்தங்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துக் கிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயங்களும் இல்லை. தூங்கி எழுந்த முத்து நேரே தன் வீட்டுக்குச் சென்றான்.
அண்ணனைக் கண்ட தம்பிகள் இருவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், "அண்ணா! காலையில் இருந்து உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர். பின், "என்ன நடந்தது?" என்று கேட்டனர்.
எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து முந்தின நாள் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான். ‘‘நேற்று இரவு யாரோ என்னை அடித்து குளத்தில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். அப்போது எனக்கு முன்னால் கடவுள் தோன்றினார். நான் அவரை வணங்கினேன். ‘என்ன நடந்தது?‘ என்று கேட்டார் கடவுள். நடந்ததைச் சொன்னேன். ‘இனிமேல் உனக்கு எந்த ஆபத்தும் வராது. அது மட்டுமல்ல, 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்‘ என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்து விட்டார்‘‘ என்று கூறினான்.
தாங்கள்தான் அவனை அடித்துப் போட்டது என்று அவனுக்கு தெரியாது என்று, ‘நல்ல வேளை! தப்பித்தோம்‘ என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். அண்ணனைப் போல தாங்களும் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர். பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஆட்களை ஏற்பாடு செய்தனர். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
அடுத்த நாள் காலையில் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்ததும் தங்கள் உடம்பில் காயங்கள் ஏதும் இல்லாதது கண்டு சந்தோஷம் அடைந்தனர். அப்போது அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.
"உங்களுக்கு என்ன நடந்தது"? என்று கேட்டார் கடவுள். தங்களை தங்கள் விரோதிகள் சிலர் அடித்துப் போட்டு விட்டுப் போய்விட்டதாகக் கூறினார்கள்.
அவர்கள் பொய் பேசுவதை அறிந்து கொண்ட கடவுள் அவர்களுக்குத் தகுந்த தண்டனை தர விரும்பினார். ‘‘சரி! உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்.‘‘ என்றார் கடவுள்.
"கடவுளே! நான் 500 ஆண்டுகள் சாகாமல் வாழ வேண்டும்." என்றான் ரத்தினம். உடனே வைரம், "நான் 600 ஆண்டுகள் சாகாமல் வாழ வேண்டும்" என்றான்.
பேராசை பிடித்த ரத்தினம் ‘‘நான் 800 ஆண்டுகள்.‘‘ என்றான். உடனே வைரம், ‘‘நான் 1000 ஆண்டுகள்.‘‘என்றான்.
இப்படியே இருவரும் ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். கடவுளுக்கோ சிரிப்புத் தாங்கவில்லை. "பொறுங்கள். நான் சொல்வது போல் நீங்கள் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்.
"சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.
"இதோ! இந்தக் கோயிலின் எதிரில் இருக்கும் இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் தாவிக் குதித்தனர்.
இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான். வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம். இவ்வாறு மாறி மாறி நினைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு வெளியே வராமலே இருந்தனர்.
யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார்கள் என்று பார்த்தபடி கடவுள் கரையில் நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் மூச்சுப் பிடிப்பு தாங்காமல் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர். கடவுள் சிரித்தபடியே மறைந்து போனார்.
நீதி:
‘அடுத்தவர்களை அழிக்க நினப்பவர்கள் தாங்களாகவே அழிந்து போவார்கள்!‘
No comments:
Post a Comment