ஒரு காட்டில் தாகத்தால் வாடிய நரி ஒன்று நீர் தேடி அலைந்தது. ஒரு இடத்தில் நீர்நிலை இருந்ததை கண்டு மகிழ்ந்தது. நீர் அருந்த அருகில் சென்றது.
இயல்பாகவே நரி எச்சரிக்கை மிகுந்தது.
‘ஒருவேளை முதலை போன்ற கொடிய நீர்வாழ் உயிரினங்கள் இருந்தால் அவை நம்மை கொன்று தின்றுவிடுமே.‘ என்று எண்ணியது.
எதற்கும் சோதித்துப் பார்த்துவிடுவோம் என்று நீர்நிலை அருகில் சென்றது
நீர்நிலை ஆடாமல் அசையாமல் இருந்தது.
அவ்வாறு நீர்நிர்லை இருந்தால் அதில் முதலை இருக்கும் என்று நரியின் முன்னோர்கள் சொன்னது நரிக்கு நினைவுக்கு வந்தது.
அதை சோதித்துப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்து ஒரு கல்லை எடுத்து நீர்நிலையில் போட்டது.
கல் விழுந்தவுடன் உள்ளேயிருந்து முதலை ஒன்று சிலிர்த்து வந்தது. கரையில் நின்ற நரியைப் பார்த்தவுடன் அதை தின்னும் ஆசையுடன் அதை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.
கரையில் நின்றுகொண்டிருந்த நரி சாமர்த்தியமாக தப்பித்துக்கொண்டது.
‘நன்றி முதலையாரே! நல்ல வேளையாக கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார்‘ என்று கூறியது.
முதலைக்கோ இரை கிடைக்காத எரிச்சல். இருந்த போதிலும் அதனிடம் இச்சகமாகப் பேசியது.
‘நீ சொல்வது உண்மைதான் நண்பா! நீயோ தரையில் இருந்து இரையைதேடிப் பெறுகிறய். நானோ என் இருப்பிடம் தேடி வரும் இரையை வேட்டையாடுகிறேன். இதில் என் தப்பும் இல்லை. உன் தப்பும் இல்லை. ஆனாலும் உன்னுடைய சாமர்த்தியத்தை நான் பாராட்டியே தீர வேண்டும்.‘ என்றது முதலை.
‘நீ எனக்கு இரையாகவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உன் சாமர்த்தியமும், அறிவும் உண்மையிலேயே நீ பெரிய அறிவாளி என்று காட்டுகிறது. அப்படிப்பட்ட உன்னோடு நட்பு கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?‘ என்று முதலை நரியிடம் கேட்டது.
நரிக்கு முதலையை பிடிக்கவில்லை என்றாலும் அது சாமர்த்தியமாக இச்சகம் பேசுகிறது என்று நரிக்கு புரிந்தது. இருந்தாலும் ஒப்புக்கு சரி என்று சம்மதித்தது.
‘நான் உன்னுடன் நட்பாக இருக்க வேண்டுமானால் நான் நீர் அருந்த வரும்போது நீ தரைக்கு வந்துவிட வேண்டும்‘ என்று நிபந்தனை விதித்தது.
முதலையும் அதை ஏற்றுக்கொண்டு தரைக்கு வந்து வெகு தூரத்தில் விலகி நிற்க, நரியும் நீர் அருந்திவிட்டு சென்றது.
இது இப்படியே தொடர, நரி, முதலை நட்பு வளர்ந்தது.
நரி இந்த முதலையால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் அபத்து வரலாம் என்று எண்ணியது.
முதலைக்கோ இந்த நரியை எப்படியும் தின்றே தீர வேண்டும் என்ற எண்ணம்.
ஒரு சமயம் பார்த்து முதலை நரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நரியிடம், ‘நண்பா! எனக்கு ஒரு உதவி செய்வாயா?‘ என்று கேட்டது.
‘என்ன செய்ய வேண்டும்?‘ என்று நரி கேட்க,
‘இங்கே ஒரு குரங்கு சுற்றித் திரிகிறது. அதை கொன்று அதன் ஈரலை தின்ன வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கு ஆசை. நீ அதை எப்படியாவது இங்கு அழைத்து வர வேண்டும். அது மிகவும் சாமர்த்தியமும் தந்திரமும் மிக்கது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்‘ என்று சொன்னது முதலை.
‘அப்படியென்ன சாமர்த்தியமாக இருக்கிறது?‘ என்று நரி கேட்க,
‘நீயாவது கல்லை போட்டு பார்த்து நான் இருப்பதை தெரிந்து கொண்டு நீர் குடிக்காமல் விலகி நின்றாய். ஆனால் அந்த குரங்கோ நான் இருப்பது தெரிந்தும், ஒரு மூங்கிலை கொண்டு வந்து அதன் வழியே மரத்தின்மீது அமர்ந்துகொண்டு நீரை குடித்துவிட்டு செல்கிறது. அப்படியானால் அதன் அறிவு பாராட்டப்படக்கூடியதுதானே.‘ என்றது முதலை.
அதைக் கேட்டவுடன் முதலையின் கூரிய அறிவை நரி புரிந்து கொண்டது.
‘தன்னைவிட அறிவாளியாக இருப்பவர் யாரையும் அழித்துவிட வேண்டும் என்று இந்த முதலை நினைக்கிறது. அந்த குரங்கு அறிவாளி என்று அதற்கு விளங்கி விட்டதால் அதை ஒழித்துக்கட்ட என்னை பன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது இந்த முதலை. அதை நான் எப்படி அழைத்து வருவேன் என்ற தந்திரம் இந்த முதலைக்குத் தெரிந்து விட்டால் நாளை என்னை எப்படி ஒழித்துக்கட்டுவது என்று அதற்கு புரிந்துவிடும். ஆகவே, கொல்லப்பட வேண்டியது இந்த முதலைதான்‘ என்று நரி எண்ணியது.
அதன் பின்னர், நரி அந்த குரங்கைத் தேடிச் சென்றது.
அது குரங்கிடம் முதலையின் திட்டத்தை எடுத்துக் கூறி, எனவே, அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறியது.
குரங்கும் நரியும் நீண்ட ஆலோசனை நடத்தின.
கடைசியில் குரங்கு நரியிடம் கூறியது, ‘இந்த முதலை நீரில் இருக்கும் வரை அதன் பலம் அதிகம். எனவே, அதை நீரைவிட்டு அதிக தூரம் கூட்டி வந்து விடு. அதன் பிறகு அதை கொல்லும் வழியை நான் பார்த்துக் கொள்கிறேன்‘ என்று.
பிறகு நரியின் காதோடு காதாக ஏதோ ரகசியம் கூறிவிட்டு குரங்கு கிளம்பிச் சென்றது.
நரி நேரே முதலையிடம் சென்றது.
குரங்கோ நேரே ஜமீந்தார் வீட்டுக்குச் சென்றது.
அங்கிருந்து ஜமீந்தாரினியின் முத்துமாலையைப் பிடுங்கிக்கொண்டு காட்டை நோக்கி ஓடியது.
ஜமீந்தாரின் ஆட்கள் குரங்கைத் துரத்தி பின்னால் ஓடி வந்தனர்.
காட்டில் நரி முதலையிடம், நண்பா! நான் சாகப் போகிறேன். என்னை வேடன் சுட்டு விட்டான். தயவு செய்து நீரிலிருந்து வெளியே வந்து என்னைக் காப்பாற்று!‘ என்று கத்தி அழைத்தது.
நீரிலிருந்து வெளியே வந்த முதலை கரையில் துடித்துக் கொண்டிருந்த நரியைப் பார்த்ததும், அதன் நாக்கில் எச்சில் ஊறியது.
‘இதோ வருகிறேன்!‘ என்றபடியே விறுவிறுவென தரையில் நடந்து வந்தது.
அப்போது அங்கு ஓடி வந்த குரங்கு ஜமீந்தார் வீட்டிலிருந்து பிடுங்கி வந்த முத்துமாலையை முதலைக்கும் நரிக்கும் இடையில் வீசி எறிந்தது.
முதலை முத்துமாலையை நெருங்கும் நேரம், குரங்கை துரத்தி வந்த ஜமீந்தாரின் ஆட்கள் அங்கு வந்து சேர, முத்துமாலை முதலை அருகில் கிடப்பதைப் பார்த்ததும் தங்கள் கையில் கொண்டு வந்த ஆயுதங்களால் முதலையைத் தாக்கி கொன்று முத்துமாலையை எடுத்துச் சென்றனர்.
அதற்குள், துடிப்பது போல் நடித்துக்கொண்டிருந்த நரி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
குரங்கும் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டது.
முதலை ஒழிந்த திருப்தியில் இரு விலங்குகளும் நிம்மதியாக நீர்நிலையில் நீர் குடிக்க சென்றன.
நீதி:
'கெடுவான் கேடு நினைப்பான்'
No comments:
Post a Comment