Wednesday, 27 February 2013

யார் புத்திசாலி?

ஒரு கிராமத்தில் உப்பு வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். அவர் ஒரு கழுதை வளர்த்து வந்தார். அதன் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றி, அதை அக்கம், பக்கத்து ஊர்களுக்கு கொண்டு சென்று உப்பு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி ஒரு நாள் கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றி பக்கத்து ஊருக்கு கிளம்பினார். வழியில் ஒரு ஆறு வந்தது. அந்த ஆற்றினை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு முன்னால் சென்ற அவரது கழுதை கால் வழுக்கி ஆற்றில் விழுந்தது. இதனால் மூட்டையில் இருந்த உப்பு தண்ணீரில் கரைந்தது. முதுகில் இருந்த மூட்டை லேசானதை உணர்ந்தது கழுதை.

மறுநாளும் வியாபாரி உப்பு மூட்டையை ஏற்றி ஆற்றைக் கடக்கும்போது வேண்டுமென்றே தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் கரைந்து உப்பு மூட்டைகள் லேசானது.

இதேபோல் இரண்டு, மூன்று நாட்கள் நடந்தன. இதனை கவனித்த வியாபாரிக்கு இலேசாக சந்தேகம் வந்தது.

மறுநாள் வியாபாரி கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கட்டினார்.

வியாபாரியின் தந்திரத்தை அறியாத கழுதை இம்முறையும் ஆற்றைக் கடக்கும்போது வேண்டுமென்றே கால் இடறி விழுவதுபோல் ஆற்றில் விழுந்தது.

ஆனால் இப்போது கழுதைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீரில் நினைந்த பஞ்சு மூட்டைகளின் சுமை இரண்டு மடங்காக கூடியது. ஏமாந்த கழுதை இருமடங்கு சுமையோடு வியாபாரியை பின்தொடர்ந்து சென்றது.

வியாபாரி மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

நீதி:
‘நாம்தான் சிறந்த புத்திசாலி, அடுத்தவர்கள் எல்லாம் முட்டாள்கள்‘ என்று நினைத்துக் கொண்டு சரியான முறையில் யோசிக்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடக்கூடாது.

No comments:

Post a Comment