Sunday 24 April 2016

வெளிச்சத்தின் தூரம்

ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு பிஸினஸில் ஏதோ பிரச்சினை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். "அவரைச்சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்" என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்கு பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத்துறவியை சந்திக்கச்சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை விளக்கிச்சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச்சொன்னார்.
அவருடைய பிரச்சினைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார். அவற்றை கேட்ட பணக்காரருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"ஐயா, நீங்க என்னை தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்சினைகள் ரொம்பப்பெரிசு. அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச்சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!"

ஜென் துறவி கோபப்படவில்லை. "இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?" என்றார்.

"ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?"

"பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படி திரும்பிப்போவீங்க?"

"அது ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை. நான் கார்'ல தான் வந்திருக்கேன்!"

"உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?"

"நிச்சயமாக. அதில் என்ன சந்தேகம்?"
"எனக்கு தெரிஞ்சு எந்தக்கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வைச்சுகிட்டு ஏழெட்டு கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?"

"என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்கு மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சா போதாதா? அதை வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூட போகலாமே!"

"அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!" என்றார் ஜென் துறவி.
எதையுமே சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க. அதைப்பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும். எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம் நண்பர்களே...!!!

No comments:

Post a Comment